முகப்பு > semmozhi > இராவணன் அரக்கன்

இராவணன் அரக்கன்

இராவணன் அரக்கன் என்று சொல்லும் புறநானூறு

இராமாயண, மகாபாரதங்கள் சொல்லுவதும் புராணங்கள் பேசும் தொன்மங்களும் தென்னகத்தில் புழங்கி அது பின்னர் வடமொழியில் எழுதப்பட்டது என்றொரு முன்னீடு (Proposal) சில தமிழறிஞர்களால் வைக்கப்படுகின்றது. எனக்கும் பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போது அப்படித் தான் தோன்றுகிறது. பழைய இராமாயணங்கள் என்று திரு. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ள ‘மறைந்து போன தமிழ் நூல்கள்’ என்ற நூலில் காட்டப்படும் சில எடுத்துக்காட்டுகள் அந்தக் கருத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கின்றன. அதில் என் கவனத்தை மிகவும் கவர்ந்த ஒரு எடுத்துக்காட்டை இந்த இடுகையில் எடுத்து எழுதுகிறேன்.

இலம்பாடிழந்த என் இரும்பேர் ஒக்கல்
விரல்செறி மரபின செவித்தொடக்குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக்குநரும்
அரைக்கமை மரபின மிடற்றுயாக்குநரும்
மிடற்றமை மரபின அரைக்குயாக்குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே
(புறநானூறு பாடல் 378 வரிகள் 13 – 21)

முதலில் இந்தப் பாடலுக்கு எனக்குத் தெரிந்த வரை பொருள் சொல்லிவிட்டுப் பின்னர் இதில் இருந்து தோன்றும் எண்ணங்களை/கருத்துகளைச் சொல்கிறேன்.

இலம் பாடு – வறுமை; இல்லை என்பதால் படும் பாடு. வறுமை என்பதற்கு மிக அழகான தமிழ்ச்சொல்.
இழந்த – நீங்கிய
என் இரும் பேர் ஒக்கல் – என் மிக மிகப் பெரிய சுற்றத்தவர்
விரல் செறி மரபின – விரலில் அணிந்து கொள்ள வேண்டிய அணிகலன்களை (நகைகளை)
செவித்தொடக்குநரும் – காதில் தொடுத்துக் கொண்டவர்களும்
செவித்தொடர் மரபின – காதில் தொடுத்துக் கொள்ள வேண்டிய நகைகளை
விரற்செறிக்குநரும் – விரலில் அணிந்து கொண்டவர்களும்
அரைக்கமை மரபின – இடுப்பில் அணிந்து கொள்ள வேண்டியவைகளை
மிடற்று யாக்குநரும் – கழுத்தில் கட்டிக் கொண்டவர்களும்
மிடற்று அமை மரபின – கழுத்தில் அணிய வேண்டியவைகளை
அரைக்கு யாக்குநரும் – இடுப்பில் கட்டிக் கொண்டவர்களும்
(என நின்ற அவர்கள்)
கடுந்தெறல் – மிகக்கடுமையாகப் போர் புரிய கூடிய, மிக்க சினம் கொண்ட – முன்னர் ‘மிக்க இன்பத்தை விளைவிக்கும் தேனை (நிறைய கொண்டிருக்கும், நிறைய உண்ட)’என்று எழுதியிருந்தேன். இந்த இடுகையை மின் தமிழ் குழுமத்தில் இட்ட போது திரு. வேந்தன் அரசு ஐயாவும் திரு. ஹரிகிருஷ்ணன் ஐயாவும் இந்தப் பிழையைச் சுட்டிக் காட்டினார்கள். இப்போது மாற்றிவிட்டேன்.

இராமன்
உடன் புணர் – உடன் வாழும்
சீதையை
வலித்தகை – வலித்த கை என்று பிரித்தால் மிகுந்த வலிமை மிகுந்த கைகளை உடைய, வலித் தகை என்று பிரித்தால் வலிமையில் சிறந்த
அரக்கன் – இராவணன் என்று பெயர் சொல்லவில்லை. ஆனால் அரக்கன் என்ற சொல்லைப் புழங்கியிருக்கிறார் புலவர்
வௌவிய ஞான்றை – கவர்ந்து சென்ற போது
நிலஞ்சேர் மதரணி – நிலத்தில் வீசப்பட்ட அணிகலன்களைக்
கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை – கண்ட குரங்கின் சிவந்த முகங்களைக் கொண்ட பெரிய கூட்டம்
இழைப்பொலிந்தாங்கு – அணிகலன்களை (இடம் மாற்றித் தம் உறுப்புகளில்) அணிந்து கொண்டதைப் போல (இருந்தது)
அறாஅ அருநகை – (அதனைக் கண்டு) நிறுத்த முடியாத அளவிற்குப் பெருஞ்சிரிப்பை
இனிது பெற்று இகுமே – இனிமையுடன் பெற்று சிரித்துக் கொண்டிருந்தேன்.

***
வறுமையில் இருந்த தம் சுற்றத்தார் ஒரு அரசன் தந்த பரிசில்களால் தம் வறுமை நீங்கிய போது அப்போது தான் முதன்முதலாகப் பார்க்கும் அணிகலன்களை இடம் மாற்றி அணிந்து கொண்டது குரங்குகள் நகைகளை இடம் மாற்றி அணிந்து கொண்டதைப் போல் மிக்க நகைச்சுவையாக இருந்தது என்கிறார் இந்தப் புலவர்.

இலம்பாடு இழந்த என்று சொல்லும் போது மிக்க சுவையுடன் இருக்கிறது. ‘இல்லை என்னும் பாடு இனி ஒழிந்தது’ என்ற மகிழ்ச்சி நன்கு தொனிக்கிறது.

என் இரும் பேர் ஒக்கல் என்ற போது தன் சுற்றத்தார் என்னும் பாச உணர்வும் சுற்றம் தழால் (சுற்றத்தைக் காப்பாற்றுதல்) என்னும் பெருங்குணமும் நன்கு காட்டப்படுகின்றன. பொருள் வந்த போது தானும் தன் குடும்பத்தாரும் மட்டுமே அனுபவிக்காமல் தன் மிகப்பெரிய சுற்றத்தவர்கள் எல்லாம் அதனை அனுபவிக்கக் கொடுத்து அதில் மகிழும் புலவரின் அருங்குணம் தெரிகிறது.

‘கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப்பெருங்கிளை இழைப்பொலிந்தாங்கு’ என்ற நான்கு அடிகளால் வால்மீகி இராமாயணத்திலும் கம்பராமாயணத்திலும் வரும் கதைப்பகுதியைச் சொல்கிறார். இந்தத் தொன்மம் ஆதிகாவியமாகிய வால்மீகியின் வடமொழி நூலில் தான் முதன் முதலில் வந்தது என்று சொல்வோம். அந்த ஆதிகாவியத்தில் வருவதற்கு முன்பே சங்ககாலப் புலவராகிய இவருக்கு இந்தத் தொன்மம் தெரிந்து இருந்திருக்கிறது.

உவமை அணியின் இலக்கணமே ‘தெரியாத ஒன்றிற்கு தெரிந்த ஒன்றை உவமையாகச்’ சொல்லுவதே. இங்கே சுற்றத்தவரின் நிலையைச் சொல்லும் போது குரங்குகளின் நிலையை உவமையாகக் காட்டுவது இந்தத் தொன்மம் புலவருக்கு மட்டும் இல்லாமல் இந்தப் பாடலை அரங்கேற்றும் அவையில் இருப்பவருக்கும் இந்தப் பாடலைப் படித்து அனுபவிக்கும் வாய்ப்பு உடையவருக்கும் இந்தத் தொன்மம் தெரிந்திருந்தது என்பதைக் காட்டுகிறது.
இப்படி பெரும்பாலாவருக்குத் தெரிந்த கதையாக இராமாயணக்கதை சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது. கம்பனின் காலத்தில் காவிய வடிவை அது பெற்றிருந்திருக்கலாம். அவ்வளவே.

இராமன் சீதை என்று கதையின் தலைவன் தலைவி பெயரைச் சொன்ன புலவர் வில்லனின் பெயரைச் சொல்லாமல் அரக்கன் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது சங்ககாலத்திலேயே சீதையைக் கவர்ந்தவன் அரக்கன் என்ற கருத்து நன்கு நிலை நாட்டப்பெற்றிருந்தது என்று காட்டுகிறது.

சீதையின் நகைகளைக் கண்டபடி அணிந்தவர்கள் குரங்குகூட்டத்தினர் என்று மிகத்தெளிவாகச் சொல்லியிருப்பதும் கவனத்திற்குரியது.

தமிழர்களை அரக்கர்கள் என்றும் குரங்குகள் என்று வடநூலார் இராமாயணத்தில் எழுதியிருக்கிறார்கள் என்ற கருத்து மிகுந்த வலிவுடன் நம்மிடையே இருக்கிறது. சீதையை வௌவியவன் அரக்கன் என்று இந்தத் தமிழ்ப்புலவர் சங்ககாலத்திலேயே சொல்லியிருக்கிறார். வௌவியவன் தமிழன் என்றால் அவனை அரக்கன் என்று குறிப்பாரா? அவனை அரக்கன் என்று குறித்துவிட்டு இராமனையும் சீதையையும் பெயருடன் குறிப்பது சிந்திக்க வேண்டிய ஒன்று தானே?

தமிழர்களைக் குரங்குகள் என்று சொன்னார்கள் என்ற கருத்தும் இந்தப் பாடலினால் அடிபட்டுப் போகிறது. சங்கத் தமிழ்ப் பாடலிலேயே குரங்குகள் என்று தெளிவாக இருக்கிறது.

வன நரர்களை (காட்டு மனிதர்களை) வானரர்கள் (குரங்குகள்) என்று வால்மீகி இராமாயணம் சொல்லிவிட்டது என்றதொரு கருத்தும் இருக்கிறது. அந்த க்ருத்தின் வலிமையும் இந்தப் பாடலுக்கு முன் அடிபட்டுப் போகிறது.

தமிழர்களையோ மற்ற இனத்தவர்களையோ குரங்குகள் என்று வடநூலார் சொல்லவில்லை. இந்த தொன்மத்தின் படி அவை குரங்குகளே; அப்படித் தான் சங்ககாலத்திலும் தொன்மம் சொல்லப்பட்டிருக்கிறது; பின்னர் மற்ற காவிய இராமாயணங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றது.

இந்த ஒரு பாடல் எடுத்துக்காட்டால் இராமாயணம் ஆரிய திராவிட போரின் காவிய உருவம் என்றும் ஆரியர்கள் திராவிடர்களைக் கேவலமாக எழுதியிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படும் கருத்துகள் தூள் தூளாகிவிட்டன என்று சொல்லமாட்டேன். அந்தக் கருத்துகளுக்கும் தரவுகள் இருக்கலாம். பலர் ஆராய்ந்து சொன்னவைகளை அப்படி எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. ஆனால் அவை சொல்லும் கருத்துகளுக்கு எதிராக இப்படி ஒரு புறநானூற்றுப்பாடல் இருக்கிறது. அந்தத் தரவினைக் கண்டு நண்பர்கள் சிந்திக்கவேண்டும் என்பதே இந்த இடுகையின் நோக்கம்.

Categories: semmozhi
  1. 1:42 மு.பகல் இல் ஜூன் 30, 2010 | #1

    AgaNanuru talked about the God coming down to earth as man and it indirectly implies on Ramar Sethu also.

    Thanks

  1. No trackbacks yet.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.